பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2019 10:15 PM GMT (Updated: 16 Oct 2019 7:01 PM GMT)

ஓமலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்,

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 54), விவசாயி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கடந்த ஆண்டு கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதே நேரத்தில் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி சாட்சி விசாரணைகள் முடிவடைந்தது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம்(நவம்பர்) 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனக்கு தண்டனை கிடைத்து விடுமோ? என்று மகாலிங்கம் மன உளைச்சல் அடைந்தார்.

தற்கொலை

இதன் காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் உள்ள அறையில் உள்பக்கமாக பூட்டிக்்கொண்டு விட்டத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே இரவில் அவரது அறை நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மல்லிகா மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மன நலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்கார வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடுமோ? என்ற பயத்தில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story