வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2019 10:15 PM GMT (Updated: 16 Oct 2019 7:10 PM GMT)

மயிலாடுதுறையில், வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அவயாம்பாள்புரம் காவிரிக்கரை தெருவை சேர்ந்தவர் தில்சாத்பேகம் (வயது 60). இவரது மகன் முகமது பயாஸ் (28). இவர், வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். அங்கு வேலை கிடைக்காததால் திரும்பவும் மயிலாடுதுறைக்கு வந்தார்.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி தில்சாத் பேகம் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த முகமதுபயாஸ், வேலை கிடைக்காத விரக்தியில் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் தில்சாத்பேகம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் அறைக்குள் சென்று பார்த்தபோது தனது மகன் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமதுபயாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story