வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது


வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 16 Oct 2019 11:15 PM GMT (Updated: 16 Oct 2019 8:59 PM GMT)

வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி தனிமையில் தவிக்கவிட்டு சென்ற சென்னை தொழில் அதிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை,

லிதுவேனியா நாட்டை சேர்ந்த 22 வயது நிரம்பிய மாணவி ஒருவர், சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

மிகுந்த ஆசை, கனவுகளுடன் நான் துபாயில் தங்கியிருந்து மேல்படிப்பு படித்து வந்தேன். அப்போது சென்னை அமைந்தகரையை சேர்ந்த தொழில் அதிபர் ருமையாஸ் அகமது, துபாயில் என்னை சந்தித்தார். அவர் என்னை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகினார். என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனால் அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன். இதன் விளைவாக நான் கர்ப்பமானேன். அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்தார்.

அவரும், அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தியதின்பேரில் எனது வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்தேன். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மார்ச் மாதம் இந்த கருகலைப்பு நடந்தது. அதன்பிறகும் அவர் கொச்சி உள்பட பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்று, என்னோடு உல்லாசத்தை பகிர்ந்தார். அதன்விளைவாக தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன்.

அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது குடும்பத்தினர் ‘தமிழகத்தை விட்டு நீ ஓடி விடு’ என்று எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். தெரியாத, புரியாத சென்னையில் என்னை தனியாக தவிக்க வைத்துவிட்டு எனது காதலர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவிட்டார். ஆயிரம்விளக்கு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

வெளிநாட்டு மாணவியை தவிக்கவிட்டு தலைமறைவான தொழில் அதிபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த மாணவி போலீஸ் பாதுகாப்பில் உள்ளார். அந்த மாணவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டு உள்ளது.

Next Story