சேலத்தில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு தனியார் பருப்பு ஆலைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்


சேலத்தில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு தனியார் பருப்பு ஆலைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 16 Oct 2019 11:00 PM GMT (Updated: 16 Oct 2019 9:51 PM GMT)

சேலத்தில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தனியார் பருப்பு ஆலைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில், சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட மணியனூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், வடகிழக்கு பருவ மழையினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய தீவிர காய்ச்சல் தடுப்பு, டெங்கு நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அவர் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து மணியனூர் சந்தை, எம்.ஜி.ஆர். நகர், நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ரூ.20 ஆயிரம் அபராதம்

அப்போது, நெத்திமேட்டில் உள்ள தனியார் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி ஆலையிலும், தனியாருக்கு சொந்தமான பருப்பு ஆலையிலும் கலெக்டர் ஆய்வு செய்தபோது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் லார்வாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த தனியார் பருப்பு ஆலைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, ஆலை வளாகம் மற்றும் திறந்த வெளியில் இருக்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன், கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமே‌‌ஷ்பாபு உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story