காஞ்சீபுரம் உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் விவசாயி தற்கொலை


காஞ்சீபுரம் உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2019 10:15 PM GMT (Updated: 17 Oct 2019 7:03 PM GMT)

உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாப்பநல்லூர் திருவேங்கிடபுரத்தை சேர்ந்தவர் செங்கல்வராயன். இவரது மகன் கோவிந்தசாமி (வயது 44). விவசாயி. இவர் தினமும் மது குடித்து தனது மனைவி சுந்தரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்கோவிந்தசாமி மது குடித்துவிட்டு தனது மனைவி சுந்தரியிடம் தகராறு செய்தார்.

இதனை பார்த்த அவரது மகன் மணிகண்டன், தினமும் மது குடித்துவிட்டு வந்து அம்மாவை திட்டி அடிக்கிறாயே என்று கண்டித்ததாக தெரிகிறது.

 மகன் தன்னை கண்டித்ததை எண்ணி மனமுடைந்த கோவிந்தசாமி வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்தை (வி‌ஷம்) எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story