சென்னை விமான நிலையத்தில் 2½ கிலோ தங்கம் பறிமுதல் ரூ.7 லட்சம் அமெரிக்க டாலரும் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் 2½ கிலோ தங்கம் பறிமுதல் ரூ.7 லட்சம் அமெரிக்க டாலரும் சிக்கியது
x
தினத்தந்தி 18 Oct 2019 10:15 PM GMT (Updated: 18 Oct 2019 4:05 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 678 கிராம் தங்கம் மற்றும் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 24), இம்தியாஸ் (21), புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல்கலாம் ஆசாத்(25), அசாருதீன்(24), கடலூரை சேர்ந்த முகமது இப்ராகீம்(70) மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த முகமது இம்ரான்கான்(30), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது மன்சூர்(30), கான்முகமது (43), மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த முகமது ரிபாய்தீன்(25) ஆகிய 9 பேரையும் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர்கள் 9 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அனைவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று தனித்தனியாக சோதனை செய்தனர். அதில் அவர்கள் அனைவரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 9 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 678 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் முகமது ரிபாய்தீன், முகமது இப்ராகீம் ஆகியோரின் சூட்கேசில் இருந்து ரூ.81 ஆயிரம் மதிப்புள்ள பயன்படுத்தப்பட்ட மடிக் கணினிகள், வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூருக்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் சிங்கப்பூர் செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஆப்தீன்(67) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் அவரது சூட்கேசில் துணிகளுக்கு இடையே அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்திச் செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவை ஹவாலா பணமா? என பிடிபட்ட ஆப்தீனிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story