கோவை அரசு ஆஸ்பத்திரியில், டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி


கோவை அரசு ஆஸ்பத்திரியில், டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி
x
தினத்தந்தி 18 Oct 2019 11:00 PM GMT (Updated: 18 Oct 2019 7:13 PM GMT)

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியானாள்.

கோவை,

கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி விசாலினி. இவர்களுடைய மகள் தீபிகா (வயது 10). பாபு இறந்துவிட்டார். இதனால் தீபிகா தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, மருதூா் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தீபிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவளை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இதையடுத்து அவள் மேல்சிகிச்சைக்காக கடந்த 16-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவளுக்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். அதில் அவளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவளை டாக்டர்கள் டெங்கு காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக இறந்தாள்.

இந்த தகவல் தீபிகாவின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களின் கண்களை கலங்கச்செய்தது. டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 31 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 115 பேரும் என மொத்தம் 146 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Story