தீபாவளி முன்பணம் வழங்காததை கண்டித்து, குன்னூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை


தீபாவளி முன்பணம் வழங்காததை கண்டித்து, குன்னூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 Oct 2019 10:45 PM GMT (Updated: 18 Oct 2019 7:13 PM GMT)

தீபாவளி முன்பணம் வழங்காததை கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர்,

குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள 27 பெண்கள் உட்பட 81 நிரந்தர தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் துப்புரவு தொழிலாளர்கள் தீபாவளி முன் பணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தீபாவளி முன்பணம் வழங்கக்கோரி குன்னூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து, துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது துப்புரவு தொழிலாளர்கள் கூறும்போது, எங்களுக்கு பணிக்கு தேவையான உபகரணங்களான துடைப்பம், கையுறை, மழைகோட், மழை காலணி ஆகியவை வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறோம்.. மேலும் தீபாவளி முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துதோம்.

ஆனால் இந்த கோரிக்கை நகராட்சி நிர்வாகத்தால் கண்டு கொள்ளப்படவில்லை. எனவே எங்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதோடு, தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர் சென்னையில் உள்ளார். அவர் வந்தவுடன் தீபாவளி முன் பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து உபகரணங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Next Story