தாளவாடி அருகே அதிக பாரம் ஏற்றிவந்த 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்


தாளவாடி அருகே அதிக பாரம் ஏற்றிவந்த 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
x
தினத்தந்தி 18 Oct 2019 11:00 PM GMT (Updated: 18 Oct 2019 7:16 PM GMT)

தாளவாடி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி,

தாளவாடி அருகே மெட்டல்வாடி கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக நேற்று மதியம் 3 லாரிகள் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு் வந்து கொண்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு திரண்டனர்.

பின்னர் அவர்கள் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் ராஜவேல் அங்கு வந்தார். அவர் பொதுமக்கள் மற்றும் லாரி டிரைவர்களிடம், ‘அனைவரும் தாளவாடி தாலுகா அலுவலகம் வாருங்கள். அங்கு வைத்து தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம்’ என்றார்.

இதைத்தொடர்ந்து சிறைபிடித்த லாரிகளை டிரைவர்கள் தாலுகா அலுவலகம் ஓட்டி சென்றனர். அங்கு தாசில்தார் ஜெகதீஷ் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘மெட்டல்வாடி கிராம சாலை வழியாக தினமும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். கர்நாடக மாநிலம் பிசில்வாடியில் இருந்து மெட்டல்வாடி வழியாக குண்டல்பேட் பகுதிக்கு ஜல்லி கற்கள் மற்றும் எம்சாண்ட் பாரம் ஏற்றி கொண்டு தினமும் 40-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன.

இந்த லாரிகள் அனைத்தும் அதிக பாரத்துடன் சென்றதால் சாலைகள் பழுதாகியது. இதனால் லாரிகள் அந்த சாலை வழியாக அதிக பாரத்துடன் வரக்கூடாது என டிரைவர்களிடம் தெரிவித்தோம். ஆனால் தொடர்ந்து லாரிகள் இந்த வழியாக அதிக வேகத்துடன் மற்றும் பாரத்துடன் சென்று வருகின்றன. இதனால் லாரிகளை சிறைபிடித்தோம்’ என்றனர்.

அதற்கு தாசி்ல்தார் லாரி டிரைவர்களிடம் கூறும்போது, ‘இனி பாரம் ஏற்றி கொண்டு லாரிகள் இந்த சாலை வழியாக செல்லக்கூடாது. காலியாக தான் லாரிகள் செல்ல வேண்டும். மீறி பாரத்துடன் சென்றால் லாரிகள் பறிமுதல் செய்யப்படும்’ என்றார். இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 3 லாரிகளும் விடுவிக்கப்பட்டது.

Next Story