வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது


வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது
x
தினத்தந்தி 18 Oct 2019 11:45 PM GMT (Updated: 18 Oct 2019 8:43 PM GMT)

வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெள்ளகோவில்,

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி வசந்தாமணி(42). இவர்கள் மதுரை ஆரப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

கணவன்- மனைவி இருவரும் தங்களது மகன் பாஸ்கரனின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்தநிலையில் செல்வராஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்டகுமார வலசை சேர்ந்த தனது அக்காள் கண்ணம்மாள்(54) வீட்டுக்கு வந்தார்.

அதன்பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தியதில் சொத்து தகராறு காரணமாக கண்ணம்மாள், அவருடைய மருமகன் நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ ஆகியோர் சேர்ந்து செல்வராஜ், வசந்தாமணியை கொலை செய்து கண்ணம்மாளின் வீட்டுக்கு அருகே புதைத்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் கண்ணம்மாள், நாகேந்திரன், இளங்கோ ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான தம்பதியிடம் இருந்து 15 பவுன் நகையை எடுத்து கண்ணம்மாள் தனது மகளான பூங்கொடியிடம்(32) கொடுத்தது தெரியவந்தது. பின்னர் கைதான 3 பேரையும் கோவை சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து வெள்ளகோவில் போலீசார், பூங்கொடியை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில், 15 பவுன் நகையை அவர் ஈரோட்டில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பெற்றது தெரியவந்தது. அந்த நகையை போலீசார் மீட்டனர்.

ஏற்கனவே தாயார், கணவர் சிறையில் உள்ள நிலையில் பூங்கொடியும் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து பிரச்சினைக்காக தம்பதியை கொலை செய்து ஒரு குடும்பமே சிறைக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம் வெள்ளகோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story