மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் கழுத்தை அறுத்து மனைவியை கொன்று கட்டிட மேஸ்திரி தற்கொலை


மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் கழுத்தை அறுத்து மனைவியை கொன்று கட்டிட மேஸ்திரி தற்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2019 11:00 PM GMT (Updated: 18 Oct 2019 9:38 PM GMT)

காளிப்பட்டி அருகே, மது குடிக்க பணம் தர மறுத்ததால் கொடுவாளால் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரி, தானும் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மல்லசமுத்திரம், 

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி அருகே உள்ள கோணங்கிபாளையம் நைனாமலை காட்டை சேர்ந்தவர் சித்தன் (வயது 55). கட்டிட மேஸ்திரியான இவர், கூலி வேலையும் செய்து வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி (48). இவர்களுக்கு அய்யந்துரை (27), கிரு‌‌ஷ்ணமூர்த்தி (25), முருகன் (23) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

சித்தன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து, நான் கட்டிய வீட்டிற்குள் நீ வரக்கூடாது என்று கூறி மனைவி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் ஈஸ்வரி பணம் தர மறுத்ததால் இது தொடர்பாகவும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வீட்டின் அருகே சிமெண்டு அட்டை போட்டு அதில் ஈஸ்வரி தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி சிமெண்டு அட்டை போட்டு இருந்த இடத்தில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சித்தன் கொடுவாளால் ஈஸ்வரியின் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்தார். பின்னர் வீட்டின் அருகில் உள்ள சோளக்காட்டுக்கு சென்ற அவர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக மனைவியை அவர் கொலை செய்தது மகன்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்று விட்டார். இதனால் இந்த சம்பவம் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த அவரது மகன்களுக்கு உடனடியாக தெரியவில்லை. நேற்று அதிகாலை அவர்கள் எழுந்தபோது வீடு பூட்டி இருந்ததையடுத்து, வீட்டின் ஓட்டை பிரித்து வெளியே வந்து பார்த்தபோது தான் நடந்த சம்பவம் அவர்களுக்கு தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் அங்கு வந்து கணவன், மனைவியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது குடிக்க பணம் தர மறுத்ததால் கொடுவாளால் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரி, தானும் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story