மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிக்கும் பணி - கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்


மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிக்கும் பணி - கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:30 PM GMT (Updated: 18 Oct 2019 9:38 PM GMT)

மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை மூலம் ஒட்டுமொத்த பரப்பில் பூச்சி மருந்து தெளிக்கும் பணியை கலெக்டர் சாந்தாகலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்

பாடாலூர், 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை மூலம் ஒட்டுமொத்த பரப்பில் பூச்சி மருந்து தெளிக்கும் பணியை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஆண்டு மாவட்டத்தில் புதிதாக மக்காச்சோள பயிரில் படைப்புழுக்கள் தாக்குதல் ஏற்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த ஆண்டு இப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண்மை துறை மூலமாக விவசாயிகளின் வயல்களில் ஒட்டு மொத்த பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலமாக 45 நாட்களுக்கு குறைந்த வயதுடைய மக்காச்சோளப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள உழவர் ஆர்வலர் குழுக்கள் மூலமாகவோ அல்லது பிற சேவை வழங்குவோர் மூலமாகவே மக்காச்சோள வயல்களில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பூச்சிமருந்து தெளிக்கப்படும். எனவே இத்திட்டதிற்கு தேவையான இடுபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு படைப்புழுவை கட்டுப்படுத்த ஒட்டு மொத்த முறையில் பூச்சிமருந்துகள் விவசாயிகளின் வயல்களில் தெளிக்கப்படும் என்றார்.

இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், வேளாண்மை துணை இயக்குனர் ராஜசேகரன், ஆலத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டியன், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் காரை உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் சாந்தா புதுக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி, ரே‌‌ஷன் கடை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story