விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் டிராக்டர் மோதி சாவு


விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் டிராக்டர் மோதி சாவு
x
தினத்தந்தி 18 Oct 2019 11:00 PM GMT (Updated: 18 Oct 2019 9:39 PM GMT)

பரமத்தி வேலூர் அருகே, விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் டிராக்டர் மோதி பரிதாபமாக இறந்தார்.

பரமத்தி வேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்த நகரை சேர்ந்தவர் செல்வம். இறந்து விட்டார். இவரது மனைவி பேபி. இவர்களுக்கு தினே‌‌ஷ்குமார் (வயது 25) என்ற மகன் இருந்தார். சொந்தமாக ஆட்டோ வைத்திருந்த இவர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொந்தளம் அருகே ஒரு சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க ஏற்றி வருவதற்காக தினே‌‌ஷ்குமார் ஆம்புலன்சில் சென்றார். ஜேடர்பாளையம் சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது, பாண்டமங்கலம் கோப்பணம்பாளையத்தில் ஒரு வளைவில் எதிரே வந்த டிராக்டரும், ஆம்புலன்சும் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் தினே‌‌ஷ்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள முனிநாதபுரத்தை சேர்ந்த சுரே‌‌ஷ் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி இறந்த தினே‌‌ஷ்குமாருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பிரியங்கா (25). இவருக்கு சித்தே‌‌ஷ் (5) என்ற மகன் உள்ளார். இரண்டாவது மனைவி கண்மணி (22) இவருக்கு சுதர்சனா (2) என்ற மகள் இருக்கிறாள்.

Next Story