தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்?


தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்?
x
தினத்தந்தி 18 Oct 2019 11:23 PM GMT (Updated: 18 Oct 2019 11:23 PM GMT)

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் தமிழர்கள் அதிகளவில் உள்ளனர். சுமார் 2½ சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாராவியில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனா்.

தாராவியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 708. இதில் ஆண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 79. பெண்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 628 ஆகும்.

தாராவியில் குடிசைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது அந்த பகுதி மக்களின் நீண்ட கால பிரச்சினைகளாக உள்ளது. இதுதவிர சுகாதாரப்பிரச்சினை இங்கு தீராத தலைவலியாக உள்ளது.

தாராவி தொகுதியில் 1980-ம் ஆண்டுகளில் இருந்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்று வருகிறது.

2014-ம் ஆண்டு மோடி அலை வீசியபோது கூட சட்டசபை தேர்தலில் தாராவியில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்று இருந்தது. 1995-ம் ஆண்டு மட்டும் சிவசேனாவின் பாபுராவ் மானே தாராவியில் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது காங்கிரஸ் சார்பில் தாராவியில் வர்ஷா கெய்க்வாட் போட்டியிடுகிறார். இவர் 2004-ம் ஆண்டு முதல் தாராவியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். தற்போது 4-வது முறையாக தாராவியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகும் முனைப்பில் உள்ளார். இவரை எதிர்த்து சிவசேனா சார்பில் ஆஷிஷ் மோரே போட்டியிடுகிறார். இவர் தவிர எம்.ஐ.எம். கட்சி சார்பில் மனோஜ் சன்சாரேவும், நவநிர்மாண் சேனா சார்பில் சந்தீப் விநாயக்கும் மற்றும் சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 12 வேட்பாளர்கள் தாராவியில் களத்தில் உள்ளனர்.

தாராவியை பொறுத்தவரை தலித், இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர்கள் அதிகளவில் உள்ளனர். காங்கிரசுக்கு தாராவியில் குறிப்பிடத்தகுந்த அளவில் ஓட்டு வங்கி இருப்பதால் இந்த முறையும் வெற்றி பெற்றுவிடலாம் என வர்ஷா கெய்க்வாட் நம்புகிறார்.

இது குறித்து வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், ‘‘தாராவியில் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள், தங்களுக்காக வர்ஷா தாய் இருக்கிறார் என கூறுவார்கள். எனக்கு போட்டி இருக்கலாம். எனினும் எனது உழைப்பு எனக்கு வெற்றியை தேடி தரும்’’ என்றார்.

ஆனால் எம்.ஐ.எம். கட்சியின் வேட்பாளர் மனோஜ் சன்சாரே காங்கிரசின் வாக்குகளை பிரிப்பார் என கூறப்படுகிறது. கூட்டணியில் இல்லாத போதும் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியும் எம்.ஐ.எம். வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், ‘‘வர்ஷா கெய்க்வாட் மீது தாராவி மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனா். இந்த முறை தாராவியில் சிவசேனா வெற்றி பெறுவது உறுதி’’ என அக்கட்சியின் வேட்பாளர் ஆஷிஷ் மோரே கூறுகிறார்.

அனைத்து கட்சிகளின் சாதகம், பாதகங்களை ஆராயும் போது இந்த முறை தாராவியை கைப்பற்றுவதில் காங்கிரஸ், சிவசேனா இடையே கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.


Next Story