சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; வாழைகள் நாசம்


சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 19 Oct 2019 10:45 PM GMT (Updated: 19 Oct 2019 5:27 PM GMT)

சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் நாசம் ஆனது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). விவசாயி. இருக்கு சொந்தமான 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை பயிரிட்டு உள்ளார். தோட்டத்திலேயே வீடும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் வனப்பகுதியை விட்டு 3 யானைகள் வெளியேறி ரவிச்சந்திரன் தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை முறித்தும், மிதித்தும் நாசப்படுத்தின.

இதை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவனித்தனர். ஆனால் அந்த நேரத்தில் பலத்த மழை பெய்ததால் யானைகளை அவர்களால் விரட்ட முடியவில்லை.

காலையில் ரவிச்சந்திரன், வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவருடைய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 300 வாழைகள் நாசம் ஆனது. உடனே இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் வனக்காப்பாளர் மகேந்திரன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானைகளால் நாசப்படுத்தப்பட்ட வாழைகளை பார்வையிட்டனர்.

Next Story