சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் தங்கம் பறிமுதல் துபாயில் இருந்து கடத்தல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் தங்கம் பறிமுதல் துபாயில் இருந்து கடத்தல்
x
தினத்தந்தி 19 Oct 2019 9:45 PM GMT (Updated: 19 Oct 2019 5:31 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்துவரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 23), திருச்சியைச் சேர்ந்த முகமது யாசின்(24) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இருவரிடம் இருந்தும் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 909 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் அந்த தங்கத்தை யாருக்காக துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து பிடிபட்ட இருவரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story