மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புடன் 117 பேர் அனுமதி


மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புடன் 117 பேர் அனுமதி
x
தினத்தந்தி 19 Oct 2019 10:45 PM GMT (Updated: 19 Oct 2019 10:11 PM GMT)

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புடன் 117 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை,

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பழைய பிரசவ வார்ட்டில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு 50 படுக்கைகள், கொசுவலைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் 24 மணி நேரமும் டாக்டர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய புறநோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புறநோயாளிகள் பிரிவில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோல், காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தனி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் 2 டாக்டர்கள், உதவியாளர்கள் அடங்கிய குழுவினரும் பணியில் உள்ளனர். இந்த குழுவினர் சிகிச்சைக்காக வருபவர்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புடன் 117 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 104 பேருக்கு மர்மக்காய்ச்சல் இருப்பதாகவும், 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். டெங்கு பாதிக்கப்பட்டவர்கள், டெங்குக்கான தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர டீன் வனிதா தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகள் குறித்து தொடர் ஆய்வுகள் நடத்தியும், நோயாளிகளை கண்காணித்தும் வருகின்றனர்.

Next Story