புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை கொலையில் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது


புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை கொலையில் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2019 10:45 PM GMT (Updated: 19 Oct 2019 10:38 PM GMT)

புதுச்சேரியில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூலக்குளம்,

புதுச்சேரி குயவர்பாளையம் கருணாகர பிள்ளை வீதியை சேர்ந்தவர் ஆனந்த பாலாஜி (வயது 27), எலக்ட்ரீசியன். மேலும் இவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் மயிலம் முருகன் கோவிலில் வைத்து ராஜி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஆனந்த பாலாஜி ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரில் உள்ள ஒரு டீக்கடையில் 5 பேருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் அவருடன் இருந்தவர்கள் ஆத்திரம் அடைந்து கத்தியாலும், அரிவாளாலும் ஆனந்த பாலாஜியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய ஆனந்த பாலாஜியை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாகச் செத்தார்.

இந்த கொலை குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொசப்பாளையத்தை சேர்ந்த சிவா என்ற சிவசங்கர் (23), விக்கி (21) உள்பட 5 பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

அதையடுத்து கொலை கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்தது. இந்த நிலையில் தேடப்பட்டு வந்த கொலை கும்பல் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி கொசப்பாளையத்தை சிவா என்ற சிவசங்கர் (23), விக்கி என்ற விக்னேஷ் (21), மதன் (21), ஸ்டீபன் என்ற ஸ்டீபன்ராஜ் (21) மற்றும் சாரம் சக்தி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (23) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 2 கத்திகள், 2 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ஆனந்த பாலாஜியிடம் சம்பவத்தன்று பணம் கேட்டு மிரட்டிய அருள், கிஷோர், சிலம்பு ஆகியோர் மீது உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கைதான அருள் சிறையில் இருந்து வெளியே வந்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஆனந்த பாலாஜி கருதியதாகவும், அதனால் உள்ளூரை சேர்ந்த நண்பர்களான சிவசங்கர் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் சென்று அருளை கொலை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். அதனால் ஆனந்த பாலாஜி ஆத்திரம் அடைந்து தன்னிடம் வாங்கிய பணத்தை உடனே திருப்பி தரும்படி கேட்டதோடு, அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். அதனால் பயந்துபோன சிவா மற்றும் விக்னேஷ் ஆகியோர் தங்களுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆனந்த பாலாஜியை கொலை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. மேல் விசாரணை நடந்து வருகிறது.

Next Story