இடைத்தேர்தல் நடைபெறும் புதுவை காமராஜ் நகர் தொகுதியில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது


இடைத்தேர்தல் நடைபெறும் புதுவை காமராஜ் நகர் தொகுதியில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 Oct 2019 11:45 PM GMT (Updated: 19 Oct 2019 11:48 PM GMT)

இடைத்தேர்தல் நடைபெறும் புதுவை காமராஜ் நகர் தொகுதியில் நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் பிரசாரம் தீவிரமானது.

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிசெல்வம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா உள்பட 9 பேர் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

புவனேஸ்வரனுக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோரும், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிசெல்வத்துக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கண்ணனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனாவுக்கு ஆதரவாக சீமானும் பிரசாரம் செய்தனர்.

இறுதி நாளான நேற்று காங்கிரசார் இரு சக்கர வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் சஞ்சீவி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த இருசக்கர வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அணிஅணியாக பிரிந்து இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அதேபோல் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிசெல் வத்துக்கு ஆதரவாக கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான கண்ணனும் திறந்த ஜீப்பில் சென்று வாக்குசேகரித்தார். அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்களில் அவரை பின்தொடர்ந்து ஊர்வலம் நடத்தினார்கள்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சாமிப்பிள்ளைதோட்டத்தில் தொடங்கிய பிரசாரத்தை 12.30 மணி அளவில் வெங்கடேஸ்வரா நகரில் முடித்துக்கொண்டனர்.

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் தலைமையில் அவ்வை திடலில் தொடங்கிய ஊர்வலம் கருவடிக்குப்பம் சித்தானந்தா சாமி கோவில் அருகே மாலை 4.30 மணிக்கு நிறைவுபெற்றது. கொட்டும் மழையில் நனைந்தபடியே இருசக்கர வாகன ஊர்வலங்கள் நடந்தன.

பிற்பகலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ரங்கசாமி தலைமையில் சாமிப்பிள்ளைதோட்டத்தில் தொடங்கி இரு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சாரத்தில் மாலை 5.20 மணியளவில் ஊர்வலம் நிறைவடைந்தது.

கடைசி நாளில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர வாகனங்களில் பிரசாரம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காமராஜ் நகர் தொகுதியில் நாளை (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஓட்டுப்பதிவை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

தொகுதியில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

Next Story