புரட்டாசி மாதம் முடிந்ததால் காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்


புரட்டாசி மாதம் முடிந்ததால் காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 20 Oct 2019 11:00 PM GMT (Updated: 20 Oct 2019 4:09 PM GMT)

புரட்டாசி மாதம் முடிந்ததால் காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். வஞ்சிரம் 1 கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

திருவொற்றியூர்,

சென்னையில் புரட்டாசி மாதத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் அசைவம் உண்ணுவதை தவிர்த்து வருகின்றனர். பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து பூஜை செய்வார்கள்.

இதனால் காசிமேட்டில் புரட்டாசி மாதத்தில் மீன்கள் விற்பனை மந்தமாக இருந்தது. கடந்த 17-ந்தேதியுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. நேற்று புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. மேலும் மீன்பிரியர்களும் அதிகளவில் காசிமேட்டில் படையெடுத்ததால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

இதுவரை 1 கிலோ ரூ.400, ரூ.500-க்கு விற்பனை செய்த மீன்கள் ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ரூ.600-க்கு விற்ற 1 கிலோ வஞ்சிரம் ரூ.1,600 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இறால் வரத்தும் குறைவாக இருந்தது. நண்டுகளின் விலை கணிசமாக இருந்தது. வாலை மீன் வரத்து அதிகமாக உள்ளதால் காசிமேடு மீன் வியாபாரிகள் மத்தியில் வாலை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வைத்து இருந்தனர்.

வஞ்சிரம், பாரை, கொடுவா சங்கரா, மத்தி, கிழங்கா மீன்கள் விலை ஏற்றத்தினால் விலை குறைவாக உள்ள சிறிய வகை மீன்களை பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர். பலர் மீன்கள் விலை உயர்வால் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும் ஆடு, கோழி இறைச்சி வகைகள் விலை ஏற்றத்தினாலும், உடலுக்கு நன்மைதரும் என்பதாலும் புரட்டாசி மாதம் நிறைவுபெற்று மீன் விலை உயர்ந்த போதிலும் பலர் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச்சென்றனர்.

கடந்த மாதம் வெறிச்சோடி இருந்த காசிமேடு மீன்பிடித்துறைமுகம், புரட்டாசி மாதம் முடிந்து தற்போது திருவிழாபோல் மீன் பிரியர்கள் கூட்டம் குவிந்ததால் மீண்டும் களைகட்டி உள்ளதாக மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை காசிமேடு பகுதியைச்சேர்ந்த மீனவர் குமரேசன், தனக்கு சொந்தமான விசைப்படகில் 3 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநில ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அவருடைய வலையில் ராட்சத மீன் சிக்கியது.

சக மீனவர்கள் உதவியுடன் காசிமேடு கடற்கரைக்கு அந்த ராட்சத மீனை கொண்டு வந்தார். அவரது வலையில் சிக்கியது, ‘ஏமன் கோலா’ என்ற அரியவகை மீன் ஆகும். 400 கிலோ எடையுள்ள அந்த மீன் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

‘ஏமன் கோலா’ மீனை கேரள மாநிலத்தில் கருவாடு உணவாக விரும்பி சாப்பிடுவதால் அந்த மீன் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பொதுவாக எப்போதாவது தென்படும் அரியவகை மீன் ஒன்று, காசிமேடு மீனவர் வலையில் சிக்கியது சக மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


Next Story