வேலூர் அருகே, மினிலாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சா பறிமுதல் - அண்ணன் - தம்பி உள்பட 3 பேர் கைது


வேலூர் அருகே, மினிலாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சா பறிமுதல் - அண்ணன் - தம்பி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2019 10:30 PM GMT (Updated: 20 Oct 2019 9:50 PM GMT)

வேலூர் அருகே மினிலாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சாவை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அண்ணன் - தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காட்பாடி, 

வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், கோபாலன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேலூரில் இருந்து வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் பிளாஸ்டிக் குழாய், ஒயர்களுக்கிடையே 2 மூட்டைகளில் 32 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மினி லாரி டிரைவர் திருப்பத்தூர் பொம்மிகுப்பத்தை சேர்ந்த விஜயக்குமார் (வயது 33)், அவருடைய அண்ணன் முருகன் (40) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கொத்தவலசா பகுதியில் இருந்து, திருப்பத்தூரை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இஸ்மாயில், விஜயக்குமார், முருகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story