துணி தேய்த்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு


துணி தேய்த்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 21 Oct 2019 10:45 PM GMT (Updated: 21 Oct 2019 6:06 PM GMT)

கவுந்தப்பாடி அருகே துணி தேய்த்தபோது மின்சாரம் தாக்கி இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.

கவுந்தப்பாடி, 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பெருமாம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஊமைத்துரை. இவருடைய மனைவி சண்முகபிரியா(வயது 29).

ஊமைத்துரை பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் சண்முகபிரியா நேற்று முன்தினம் மாலை வீட்டில் மின்சார சலவை பெட்டியில் துணி தேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவா் அலறியபடி மயங்கி கீழே விழுந்தார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்முகபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகபிரியா இறந்துவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் போலீசாருடன் சென்று சண்முகபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த சண்முகபிரியாவுக்கு தனுஸ்ரீ என்ற 4 வயது குழந்தை உள்ளது.

சண்முக பிரியாவுக்கும், ஊமைத்துரைக்கும் திருமணம் நடந்து 5 ஆண்டுகளே ஆகிறது. அதனால் கோபி ஆர்.டி.ஓ.வும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ளார்.

Next Story