புதுச்சேரிக்கு சி.பி.ஐ. கிளை தேவை - கவர்னர் கிரண்பெடி தகவல்


புதுச்சேரிக்கு சி.பி.ஐ. கிளை தேவை - கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2019 11:15 PM GMT (Updated: 21 Oct 2019 8:33 PM GMT)

புதுச்சேரிக்கு சி.பி.ஐ. கிளை தேவை என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை ஏனாம் பிராந்தியத்துக்கு உட்பட்ட 5-ம் எண் தீவினை ஆந்திர மாநிலத்துக்கு தாரை வார்க்க கவர்னர் கிரண்பெடி முயற்சிப்பதாக புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். அதற்கு கவர்னர் கிரண்பெடி மறுப்பு தெரிவித்திருந்தார்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி அந்த தீவில் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ரூ.5 கோடி பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். கவர்னரின் பதிலை ஏற்க மறுத்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, 5-ம் எண் தீவு மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முதலில் அரசாங்கத்தின் பணத்தை செலவிட வேண்டும். புதுச்சேரிக்கு அவசரமாக சி.பி.ஐ. கிளை தேவைப்படுகிறது. தற்போதைய சுரண்டலில் இருந்து காப்பாற்ற புதுவை யூனியன் பிரதேசத்துக்கு ஒரு நெருக்கமான ஆய்வு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது 2 சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, அதற்குரிய அபராதத்தை செலுத்துமாறும் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story