தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா? உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு


தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா? உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு
x
தினத்தந்தி 22 Oct 2019 12:26 AM GMT (Updated: 22 Oct 2019 12:26 AM GMT)

உப்பள்ளி ரெயில் நிலையத்தில் நேற்று ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது. இதில் கேண்டீன் ஊழியர் கை சிதைந்தது. தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகளின் சதியா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூரு,

டெல்லியில் சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இதில் கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்றும், எனவே பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளும்படி தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதைதொடர்ந்து கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் பயங்கரவாத தடுப்பு படை அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அனைத்து பஸ், ரெயில், விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே மைசூருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடகத்தில் ஜம்மு-காஷ்மீர், வங்காளதேச நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், பெங்களூரு, மைசூருவில் சிலீப்பர்-செல்கள் செயல்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இந்த நிலையில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடை, பட்டாசுகள், பலகாரங்கள் செய்வது என பொதுமக்களும் தயாராகி வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்றும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் கூடும் கடை வீதிகள், சுற்றுலா தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் உள்ளது, உப்பள்ளி. இங்கு தான் தென்மேற்கு ரெயில்வே மண்டல தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, மராட்டிய மாநிலம் எல்லையில் இந்த நகரம் அமைந்துள்ளது. நேற்று காலை உப்பள்ளி ரெயில் நிலையம் பயணிகள் நடமாட்டத்தால் பரபரப்புடன் காணப்பட்டது. ரெயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் மதியம் 1 மணி அளவில் ஆந்திர மாநிலம் விஜயவாடா- உப்பள்ளி இடையே இயங்கும் அமராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது. அந்த ரெயிலில் வந்த பயணிகள் இறங்கி சென்றனர்.

அதன்பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் 10 ‘டிபன்பாக்ஸ்‘கள் ஒரு பெட்டியில் இருந்தது. இதை பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதனை எடுத்துக்கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி நடைமேடைக்கு வந்தனர். அப்போது உப்பள்ளி ரெயில்வே கேண்டீனில் ஊழியராக வேலை பார்த்து வரும் ஹுசைன் சாப் (வயது 22) என்பவர் ஒரு டிபன்பாக்சை திறந்து பார்த்துள்ளார்.

அந்த சமயத்தில் அந்த டிபன்பாக்ஸ் வெடித்து சிதறியது. இதில் ஹுசைன் சாப்பின் கை சிதைந்தது. மேலும் 2-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் லேசான காயமடைந்தனர். அத்துடன் டிபன்பாக்ஸ் குண்டு வெடித்ததில் ரெயில் நிலைய அதிகாரியின் அறையின் ஜன்னல்-கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இதனால் அங்கு கூடியிருந்த ரெயில் பயணிகளும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி உப்பள்ளி ரெயில்வே போலீசாருக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடித்தது போக மீதமுள்ள டிபன்பாக்ஸ்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்போது அந்த 9 டிபன்பாக்ஸ்களும் குண்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இந்த டிபன்பாக்ஸ் குண்டுகள் குறைந்த சக்தி கொண்டவை என்றும், அதனால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும் உப்பள்ளி ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய்களும், போலீஸ் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. அந்த மோப்ப நாய்கள் உதவியுடன் ரெயில் நிலையம் முழுவதும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் நேற்று உப்பள்ளி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது பயங்கரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து உப்பள்ளி ரெயில்வே போலீசாரும், உப்பள்ளி டவுன் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தென்மேற்கு மண்டல ரெயில்வே அதிகாரிகளும் உப்பள்ளி ரெயில் நிலையம் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உப்பள்ளி உள்பட தார்வார் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், கடை வீதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமராவதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த ஒரு பிளாஸ்டிக் வாளியில், 10 டிபன் பாக்ஸ்கள் இருந்துள்ளன. அந்த பிளாஸ்டிக் டிபன்பாக்ஸ்களில் ஒன்றை சந்தேகத்தின் பேரில் ரெயில்வே கேண்டீன் ஊழியர் ஹுசைன் சாப் திறந்துபார்த்துள்ளார். அப்போது அது வெடித்து சிதறியது. இதில் அவரது கை துண்டானது. டிபன்பாக்ஸ்கள் இருந்த வாளியில் ஒரு முகவரி ஒட்டப்பட்டு இருந்தது.

அதில், மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கர்கோட்டியை சேர்ந்த பிரகாஷ் ராவ் அபித்கர் எம்.எல்.ஏ. என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் பா.ஜனதா இல்லை, காங்கிரஸ் இல்லை, சிவசேனா என குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பிரகாஷ் ராவ் அபித்கர் ரத்தினகிரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவர் சிவசேனா கட்சியில் மூத்த தலைவராகவும் உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாளியில் இருந்த 10 டிபன்பாக்ஸ் குண்டுகளில் ஒரு குண்டு வெடித்துவிட்டது. மீதமுள்ள 9 குண்டுகளையும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு நிபுணர் குழுவினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட குண்டுகள் குறைந்த சக்தியுடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை வெடித்து செயலிழக்க செய்ய முடிவு செய்தனர். அந்த குழுவை சேர்ந்த ஒரு வீரர், பாதுகாப்பு உடைகள் அணிந்துகொண்டு, நீளமான குச்சி உதவியுடன் குண்டுகள் இருந்த வாளியை தூக்கிக் கொண்டு ரெயில் நிலையம் அருகே இருந்த திறந்தவெளி மைதானத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் மணல் மூட்டைகளை அடுக்கி, 9 டிபன்பாக்ஸ் குண்டுகளும் வெடித்து செயலிழக்க வைக்கப்பட்டன. இதையொட்டி அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பலத்த பாதுகாப்பும் அங்கு போடப்பட்டிருந்தது.

ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தால் காயமடைந்த ஊழியர் - பரபரப்பு தகவல்

உப்பள்ளி ரெயில் நிலையத்திற்கு வந்த அமராவதி எக்ஸ் பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள் இறங்கிய பின்னர், உப்பள்ளி ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த ரெயிலின் பெட்டிகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தான் 10 டிபன்பாக்ஸ் குண்டுகள் இருந்த வாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வாளிக்குள் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் திறந்துபார்க்கவில்லை. மாறாக ரெயில்வே கேண்டீனில் வேலை பார்த்து வரும் ஹுசைன் சாப்பை திறந்து பார்க்க கூறியுள்ளனர்.

ஆனால் முதலில் அந்த டிபன்பாக்சை திறந்து பார்க்க அவர் மறுத்துள்ளார். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், ஹுசைன் சாப் வேலை பார்த்து வரும் ரெயில்வே கேண்டீன் அதிகாரியிடம் கூறியுள்ளனர். அந்த அதிகாரி கூறியதன் பேரில் ஹுசைன் சாப், டிபன்பாக்சை திறந்து பார்த்துள்ளார். மேலும் அதில் இருந்த வெடிகுண்டை அவர் கையால் எடுத்த போது தான் அது வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தால், ஹுசைன் சாப் கை சிதைந்த துரதிர்ஷ்டசமான சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் சுதாரிப்புடன் செயல்பட்டிருந்தால் அந்த டிபன்பாக்ஸ் குண்டு வெடித்து இருக்காது என்ற பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது. இதுபற்றி தென்மேற்கு ரெயில்வே மண்டல அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story