இரணியல் அருகே, ரெயில் மோதி வாலிபர் சாவு


இரணியல் அருகே, ரெயில் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 22 Oct 2019 10:15 PM GMT (Updated: 22 Oct 2019 6:53 PM GMT)

இரணியல் அருகே தம்பி இறந்த அதே இடத்திலேயே ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரிதாப சம்பவம்குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில், 

இரணியல் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் பிணமாக கிடந்தவர் திங்கள்சந்தை காட்டுவிளையை சேர்ந்த சந்தோஷ் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் டிப்ளமோ முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இவர் நேற்று காலை இரணியலில் உள்ள தபால் நிலையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ரெயில் தண்டவாளத்தில் அவர் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக சந்தோஷ் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ரெயில் மோதி சந்தோஷ் பலியான அதே இடத்தில் 4 மாதங்களுக்கு முன்பு அவருடைய தம்பி பிரதீஸ் என்பவரும் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார். தம்பி இறந்த இடத்திலேயே அண்ணனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story