காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 10:00 PM GMT (Updated: 23 Oct 2019 6:24 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம், 

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் அஞ்செட்டி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட நீர்ப் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் இரவு முதல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

இதனிடையே நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடை பாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்தனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை போலீசார் பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story