பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு: சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் கணிசமாக அதிகரிப்பு


பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு: சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் கணிசமாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 10:30 PM GMT (Updated: 23 Oct 2019 9:55 PM GMT)

சென்னை நகர மக்களுக்கு தீபாவளி பரிசாக தினசரி குடிநீர் வினியோகம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் வழங்கப்பட்டு வந்த 525 மில்லியன் லிட்டரில் இருந்து 125 மில்லியன் லிட்டர் அதிகரித்து தினமும் 650 மில்லியன் லிட்டராக வழங்கப்படுகிறது என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களாக புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கி இருந்ததால், அனைத்து ஏரிகளும் வறண்டு விட்டன. இதனால் மக்கள் தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை இருந்தது.

தற்போது வீராணம் தண்ணீர், கிருஷ்ணா நதிநீர் வருகை, வடகிழக்கு பருவமழை தொடக்கம் ஆகிய காரணங்களால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை குறைய தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் தண்ணீருக்காக காலிகுடங்களுடன் மக்கள் காத்திருந்த நிலைமை மாறி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பருவமழையை நம்பியே சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ளன. கடந்த 3 ஆண்டு காலமாக பருவமழை பொய்த்ததால் ஏரிகள் நீரின்றி காணப்பட்டன. எனினும் விவசாய கிணறு தண்ணீர், கல்குவாரி தண்ணீர், ரெயிலில் தண்ணீர் போன்ற நடவடிக்கைகள் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை சமாளிக்கப்பட்டது.

தமிழகம்-ஆந்திரா நதிநீர் பங்கீட்டின்படி கிருஷ்ண நதிநீரை வழங்கக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதினார். மேலும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 25-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 28-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது (நேற்று) வினாடிக்கு 775.18 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரிக்கு வினாடி 703 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அங்கிருந்து அன்றாடம் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை நீர்பிடிப்பு பகுதிகளில் நன்றாக பெய்து வருவதால் ஏரிகள் நீர்மட்டமும் கணிசமாக உயர தொடங்கி உள்ளது.

சென்னை நகரின் ஒரு நாள் குடிநீர் தேவை 830 மில்லியன் லிட்டர் ஆகும். நேற்றுமுன்தினம் வரையில் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி சென்னை மக்களுக்கு தீபாவளி பரிசாக 125 மில்லியன் லிட்டர் தண்ணீர் நேற்று முதல் கூடுதலாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இதன்மூலம் சென்னை மக்களுக்கு தினசரி 650 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில், சென்னை மக்களுக்கு படிபடியாக தண்ணீர் சப்ளை அதிகரிக்கப்படும். விரைவில் சென்னை நகர மக்களின் தினசரி தேவையான 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் மொத்த கொள்ளளவு கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 452 மில்லியன் கன அடியாக இருந்தது. தற்போது 3 ஆயிரத்து 204 மில்லியன் கன அடியாக உள்ளது.

சென்னையில் ஒரு சில பகுதிகளில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் கலங்கலாகவும், கழிவுநீர் கலந்து வருவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை தொடங்கி உள்ளதால், நோய் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story