சேலம் மாநகராட்சி பகுதிகளில் நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்


சேலம் மாநகராட்சி பகுதிகளில் நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
x
தினத்தந்தி 23 Oct 2019 11:00 PM GMT (Updated: 23 Oct 2019 10:09 PM GMT)

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆலோசனை கூட்டத்தில் ஆணையாளர் சதீ‌‌ஷ் தெரிவித்தார்.

சேலம்,

வடகிழக்கு பருவ மழையையொட்டி மாநகராட்சி நிர்வாகம், மாநகர போலீஸ் மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார், துணை போலீஸ் கமி‌‌ஷனர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

மழை காலத்தில் நிவாரண பணிகள் மேற்கொள்ள 4 குழுக்கள் மற்றும் 13 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் மாநகர போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து பருவமழை காலம் முடியும் வரை தொடர்ந்து நிவாரண பணிகளை மேற்கொள்வார்கள். பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. நிவாரண பணிகளுக்கு தேவையான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் தேங்கும் பகுதிகளில் உள்ள வடிகால்களில் அடைப்புகளை கண்டறிந்து, மழைநீர் வடியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீர் வழித்தடங்கள்

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் யாவும் பருவ மழையினால் கிடைத்திடும் அதிகப்படியான மழைநீரை சேமிக்கும் வகையில் உள்ளதா? எனவும், இவற்றில் உபரிநீர் வெளியேறும் பட்சத்தில் போதிய வாய்க்கால்களை ஏற்படுத்தப்படும். குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் ஏதுமிருப்பின் வருவாய் துறையின் உதவியோடு முற்றிலும் அகற்றப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிகள் மற்றும் ஆளிரங்கும் தொட்டி மூடிகள் அமைக்கப்பட்டு உள்ள இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கண்டறிந்து, அதை சரி செய்து பாதுகாப்பான போக்குவரத்து ஏற்படுத்திடும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும்.

கேபிள்கள் பதிக்கும் பணி

குடிநீர் குழாய்கள் பதித்தல், சாக்கடை நீர் குழாய்கள் பதித்தல் மற்றும் தொலைபேசி கேபிள்கள் பதிக்கும் பணிகளுக்காக சாலையில் பள்ளம் தோண்டும் பணிகள் மழை காலங்களில் மேற்கொள்ளப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து சுகாதார பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் உதவி போலீஸ் கமி‌‌ஷனர்கள் பாலசுப்ரமணியன், சத்தியமூர்த்தி, பி.ஈஸ்வரன், செல்வராஜ், திருமேனி, உதவி கலெக்டர் மாறன், மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story