நாராயணசாமிக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை - பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் பேட்டி


நாராயணசாமிக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை - பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2019 11:15 PM GMT (Updated: 23 Oct 2019 11:04 PM GMT)

முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி பாதயாத்திரை நடந்தது. அம்மாள் சத்திரம் சாலையில் இருந்து காரைக்கால் புதிய பஸ் நிலையம் வரை இந்த பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பாதயாத்திரையின் முடிவில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, காந்தியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு, காந்தியின் கொள்கைகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நாடெங்கும் பாதயாத்திரை நடத்தி வருகிறது.

புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு மக்கள் நலன் மீது உண்மையான அக்கறை இல்லை. பல அரசுத்துறை ஊழியர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரம் ரூபாய் பரிசுக்கூப்பன் இல்லை. பொது மக்களுக்கான இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படவில்லை. இலவச வேட்டி-சேலை இல்லை. இப்படி சந்தோசமாக கொண்டாடவேண்டிய தீபாவளியை துக்கமாக கொண்டாட வைத்துவிட்டார், முதல்-அமைச்சர். மக்கள் விரோத புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து வருகிற ஜனவரி மாதத்துக்கு பிறகு தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story