சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 15-ந்தேதி கடைசி நாள் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 15-ந்தேதி கடைசி நாள் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:30 PM GMT (Updated: 25 Oct 2019 6:31 PM GMT)

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் மாதம் 15-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை, 

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-17ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மகசூல் இழப்புக்கு ஏற்றவாறு பயிர் இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட பயிர் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. நடப்பு 2019-20ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரை சிறப்பு பருவமாக அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

நடப்பு 2019-20ம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 762 வருவாய் கிராமங்கள், நெல் சம்பா பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டும் அக்ரிகல்சர் இன் சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற பயிர் காப்பீட்டு நிறுவனத்தை ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2019-20ம் ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ஏக்கருக்கு ரூ.29 ஆயிரமும், அரசாங்கத்தால் ஒப்பளிக்கப்பட்ட பிரிமிய தொகை ரூ.6 ஆயிரத்து 380-ம் ஆகும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை 1.5 சதவீதம் மட்டுமே. அதன்படி ஏக்கருக்கு ரூ.435 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள பிரிமியத்தொகை ரூ.5 ஆயிரத்து 945-ஐ மத்திய, மாநில அரசுகளால் சரிபாதியாக பிரித்து செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் பயிர் கடன்பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும். எக்காரணத்தை முன்னிட்டும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாது.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கல், சிட்டா வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்த வேண்டும். பின்பு பணம் செலுத்தியதற்கான ரசீதை தொடர்புடைய பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் அருகிலுள்ள பொது சேவை மையங்கள் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story