காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 25 Oct 2019 10:15 PM GMT (Updated: 25 Oct 2019 8:47 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பென்னாகரம், 

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதேபோல் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து மாலை 4 மணி நிலவரப்படி 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த போதிலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story