காரியாபட்டி அருகே வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்டம்


காரியாபட்டி அருகே வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2019 11:00 PM GMT (Updated: 25 Oct 2019 9:57 PM GMT)

காரியாபட்டி அருகே வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாயை சீராம்பூர் பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக முடுக்கன்குளம், பச்சேரி, சிவலிங்கபுரம், சிறுகுளம், கல்யாணிபுரம் ஆகிய கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்த மனுவின் அடிப்படையில் காரியாபட்டி தாசில்தார் ராம் சுந்தர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதைதொடர்ந்து வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முடுக்கன்குளம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த தாசில்தார் ராம் சுந்தர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மொக்க மாயன், வருவாய் ஆய்வாளர் செல்லதுரை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், பேச்சுவார்த்தையில் இன்னும் 4 நாட்கள் கால அவகாசம் கொடுங்கள், அதன்பிறகு ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார். ஆனால் முடுக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் உடனடியாக வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தொடர் போராட்டத்தை நடத்துவோம் என்று கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதற்கு சீராம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story