கல்லிடைக்குறிச்சி அருகே, லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி


கல்லிடைக்குறிச்சி அருகே, லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 26 Oct 2019 11:00 PM GMT (Updated: 26 Oct 2019 7:04 PM GMT)

கல்லிடைக்குறிச்சி அருகே அண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்த இளம்பெண், லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

அம்பை, 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்பவருடைய மகள் ஜெசி (வயது 19). இவர் நேற்று காலை தனது பெரியப்பா பூதத்தான் மகன் சுந்தரபாண்டி (30) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் பொட்டலில் இருந்து கல்லிடைக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறியதாக தெரிகிறது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து 2 பேரும் தவறி ரோட்டில் விழுந்தனர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ஜெசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுந்தரபாண்டி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு படுகாயத்துடன் கிடந்த சுந்தரபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெசியின் உடலையும் மீட்டு பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சுந்தரபாண்டி மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story