ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Oct 2019 10:45 PM GMT (Updated: 26 Oct 2019 10:45 PM GMT)

ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான விவசாயிகள் ஏரிகளை தூர்வார வேண்டும், ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் குளங்களை ஆழப்படுத்த வேண்டும், மதகுகளை சீரமைத்து தர வேண்டும், தடுப்பணைகள் கட்ட வேண்டும், விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய பதில் அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் அளித்தனர்.

அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறும்போது இனிவரும் காலத்தில் அந்தந்த ஆர்.டி.ஓ.க் கள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தரப்பட்ட மனுக்களுக்கு பதில் அளித்து நிலுவையில் உள்ள விவரங்கள் அடங்கிய அறிக்கையுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, வேளாண்மை இணை இயக்குனர்கள் பத்மாவதி, பாண்டியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரதாப் ராவ் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story