மக்களை வாட்டி வதைக்கும் அசுரர்கள் இனியாவது தவறினை உணரவேண்டும்; தீபாவளி வாழ்த்து செய்தியில் நாராயணசாமி வலியுறுத்தல்


மக்களை வாட்டி வதைக்கும் அசுரர்கள் இனியாவது தவறினை உணரவேண்டும்; தீபாவளி வாழ்த்து செய்தியில் நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Oct 2019 11:30 PM GMT (Updated: 26 Oct 2019 11:24 PM GMT)

மக்களை வாட்டி வதைக்கும் அசுரர்கள் இனியாவது தவறினை உணர்ந்து மக்கள் நலப்பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகைக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அனைத்து தரப்பு மக்களும் பெரியவர்கள், சிறியவர்கள் என வயது பேதமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளியாகும். புராணங்களின்படி மக்களை வாட்டி வதைத்த நரகாசுரனை அழித்தொழித்த நன்னாள்தான் தீபாவளி திருநாளாக கொண்டாடப்படு கிறது.

மக்களின் நல்வாழ்வினை உறுதி செய்வதுதான் நல்லாட்சிக்கான அத்தாட்சியாகும். அவ்வாறு செய்யாமலும், செய்பவரையும் செய்யவிடாமல் தடுப்பவர்களும் ஒருநாள் இறைசக்தியால் அழித்தொழிக்கப்படுவது உறுதி என்பதே தீபாவளி பண்டிகை நமக்கு உணர்த்தும் பாடமாகும். இறுதிநேரத்தில் தான் செய்த தவறுகளை எண்ணி வருந்தி மனந்திருந்தியதால்தான் நரகாசுரன் இன்றளவும் நினைக்கப்படுகிறான்.

எனவே மக்களை வாட்டி வதைக்கும் அசுரர்கள் இனியாவது தங்கள் தவறினை உணர்ந்து மக்கள் நலப்பணிகள் இடையூறுகள் இல்லாமல் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்து இந்த தீபாவளி திருநாள் முதல் மக்கள் மகிழ்ச்சியாக வாழ நினைக்க வேண்டும் என்பதே என் ஆவலாகும். அந்நிய அசுர சக்தியும் அவற்றுடன் கரம் கோர்த்துள்ள உள்ளூர் சக்திகளும் புதுச்சேரி மக்களின் நிம்மதியான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கைக்கு எப்படியாவது இடையூறு விளைவிக்க வேண்டும் என்று இடையறாது எண்ணி, எண்ணி அதிகார மமதையில் உழன்று கிடந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து புதுச்சேரி மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்வது உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் அரசு.

புதுச்சேரி மக்களுக்கு எந்தவிதமான நல உதவிகளும் கிடைக்கக்கூடாது என்று தடைக்குமேல் தடை போட்டாலும் அவற்றை உடைத்து புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் தீபாவளிக்காக 2 கிலோ சர்க்கரைக்காக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.75 வழங்கியுள்ளது நமது அரசு என்பதை இந்த தருணத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் அரசு மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவதை தடுப்பதை துணிவோடு எதிர்கொண்டு நிறைவேற்றி வருவதோடு மாநில வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு வருவதை அறிந்ததால் மக்கள் எங்கள் அரசுக்கு கொடுத்த தீபாவளி பரிசுதான் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற இமாலய வெற்றியாகும். இதற்காக காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாது புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தீபாவளி திருநாளில் புதுவை மாநில அனைத்து தரப்பு மக்களும் தங்கள் உற்றார், உறவினரோடு புத்தாடை மற்றும் இனிப்புகள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சியோடு பண்டிகையை கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிறுவர்களும், மற்றவர்களும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்த நேரத்தில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். காற்று மற்றும் ஒலி மாசில்லாமல் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என்பது என் விருப்பமாகும்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Next Story