தீபாவளி விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - செல்பி எடுத்து மகிழ்ந்தனர்


தீபாவளி விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 28 Oct 2019 10:00 PM GMT (Updated: 28 Oct 2019 6:55 PM GMT)

தீபாவளி விடுமுறையையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ஊட்டி,

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அனுபவிப்பதற்காக சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடந்த 26-ந் தேதி காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.

தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஊட்டிக்கு அதிகளவில் குவிந்தனர். இதேபோல் நேற்றும் அவர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி நடவு செய்யப்பட்ட பல்வேறு வகையான 2½ லட்சம் மலர் செடிகளில் பூத்து குலுங்கிய மலர்களை அங்கு குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தார்கள். மலர் மாடத்தில் 15 ஆயிரம் பூந்தொட்டிகள் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இதனை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டதுடன், அதன் முன்பு நின்றபடி தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதுதவிர கண்ணாடி மாளிகையில் பல வண்ண மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது. செல்பி ஸ்பாட்டில் அவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். தீபாவளி அன்று பூங்காவுக்குள் வர நுழைவு டிக்கெட் எடுக்க கூட்டம் அலைமோதியது. ஊட்டி ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.

இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒப்பிடும் போது, நடப்பாண்டில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது.

இதற்கு காரணம் தொடர் மழையால் மண்சரிவு, மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பே என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story