மொபட் மீது அரசு பஸ் மோதல்; சிறுமி உள்பட 2 பேர் பலி மேலும் 3 பேர் படுகாயம்


மொபட் மீது அரசு பஸ் மோதல்; சிறுமி உள்பட 2 பேர் பலி மேலும் 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Oct 2019 10:15 PM GMT (Updated: 28 Oct 2019 7:06 PM GMT)

கும்பகோணம் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள குடவாசல் குச்சிபாளையம் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 37). இவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு ஒரு வயதில் பிருந்தா என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் நாகராஜ் தனது மனைவி சந்தியா, மகள் பிருந்தா மற்றும் திருநாகேஸ்வரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உறவினர் கண்ணன் மனைவி அன்னபூரணி(35), அவரது மகள் சாருமதி(4) ஆகிய 5 பேரும் ஒரே மொபட்டில் சென்றனர். சாக்கோட்டை அருகே சென்றபோது எதிரில் வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

2 பேர் பலி; 3 பேர் படுகாயம்

இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 4 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சாருமதியை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சாருமதி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சந்தியா, பிருந்தா, அன்னபூரணி ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story