4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்


4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 2:17 PM GMT)

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5–வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

 அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டி.ஏ.சி.பி.யை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கிராமபுறங்களில் பணிபுரிந்து வரும் டாக்டர்களுக்கு பட்ட மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டஙகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 25–ந் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். அவசர பிரிவு நோயாளிகளுக்கு பாதிப்பில்லாத நிலையில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி 5–வது நாளான நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், மருத்துவமனை வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுதொடர்பாக அரசு டாக்டர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நாச்சியப்பன் கூறியதாவது:– எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அரசு எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி 4 வாரத்தில் கோரிக்கைளை நிறைவேற்றுவதாக தெரிவித்தனர். ஆனால் 8 வாரத்திற்கு மேலாகியும் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.

அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மீண்டும் எங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் வார்டுகள், ஐ.சி.யூ., ஐ.எம்.சி.யூ. குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளை பாதுகாப்பாக வைக்கும் இன்குபேட்டர் உள்ள நிக்குபிரிவு என்ற உயிர் காக்கும் சிகிச்சை பிரிவுகள் மட்டுமே இயங்கும்.

எங்கள் போராட்டத்திற்கு பயிற்சி டாக்டர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் 5–வது நாளான நேற்று முதல் 24 மணி நேரமும் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story