கிராமப்புற இளைஞர்கள் கிரிக்கெட், கபடி போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


கிராமப்புற இளைஞர்கள் கிரிக்கெட், கபடி போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2019 10:00 PM GMT (Updated: 29 Oct 2019 7:28 PM GMT)

கிராமப்புற இளைஞர்கள் கைப்பந்து, கிரிக்கெட், கபடி போட்டிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிவகங்கை,

மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும், 12 டவுன் பஞ்சாயத்துகளிலும் உள்ள இளைஞர்கள் கபடி, கைப்பந்து, கிரிக்கெட் அல்லது பேட்மிண்டன் உள்ளிட்ட ஏதேனும் 3 விளையாட்டுகளுக்கு அந்தந்த கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து செயலாளர்களிடம் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டதின்படி, அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் இருபாலருக்கும் தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டு குழு அமைக்கப்படும்.

ஒவ்வொரு கிராமத்திலும் கபடி, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் (அல்லது) பூப்பந்து (அல்லது) இதர விளையாட்டுகள், இவற்றில் ஏதேனும் 3 விளையாட்டுகளுக்கு மைதானம் அமைக்கப்படும். மேலும், இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி போட்டியில் கலந்து கொள்ள 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதி உடையவர்களாவார்கள். இதில் கபடி அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும், கைப்பந்து அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும், கிரிக்கெட் அல்லது பேட்மிண்டன் அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும் (இருபாலரும்) கலந்து கொள்ளலாம்.

எனவே மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளிலும், 12 டவுன் பஞ்சாயத்துகளிலும் உள்ள இளைஞர்கள் கபடி, கைப்பந்து, கிரிக்கெட் அல்லது பேட்மிண்டன் ஏதேனும் 3 விளையாட்டுகளுக்கு அந்தந்த கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து செயலாளர்களிடம் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story