வெளிநாட்டு பறவைகளை பார்வையிட வேட்டங்குடி பகுதிக்கு பஸ் வசதி செய்து தர வலியுறுத்தல்


வெளிநாட்டு பறவைகளை பார்வையிட வேட்டங்குடி பகுதிக்கு பஸ் வசதி செய்து தர வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:45 PM GMT (Updated: 30 Oct 2019 6:40 PM GMT)

திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் போதிய பஸ் வசதி செய்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்,

மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், திருப்பத்தூர், திருப்புவனம், காளையார்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்கள், ஊருணிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி உள்ளது. திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி தற்போது பசுமையாக காணப்பட்டு வருகிறது.

 இதையடுத்து ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இங்கு இன அபிவிருத்தி செய்வதற்காக வந்துள்ளன.


இது தவிர தற்போது நந்தை, கொத்திநாரை, பாம்புதாரா, நீர்காகம், வெள்ளை மற்றும் கருப்பு நிற அரிவாள் மூக்கன், நடை ஹெரான் உள்ளிட்ட பறவைகளும் இங்கு வந்துள்ளன. ஏராளமான பறவைகள் அந்த சரணாலயத்திற்கு வந்துள்ளதால் வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பார்வையாளர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளையும் செய்து வருகின்றனர்.

எனினும் இந்த பகுதியில் மோசமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று இங்கு வரும் பார்வையாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். சரணாலயம் அமைந்துள்ள திருப்பத்தூர்–மதுரை சாலையில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பஸ்கள் இங்கு நின்று செல்வதில்லை. இங்கு பறவைகளை காண வரும் பார்வையாளர்கள், கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் மட்டும் தான் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கும் சாலையில் புதிய பயணியர் நிழற்குடை அமைத்து போதிய அளவு டவுன் பஸ்கள் விட வலியுறுத்தப்பட்டுள்ளது. பஸ் வசதி செய்து கொடுத்தால் ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து இந்த பறவைகளை பார்வையிட்டு செல்ல வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story