ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் திறந்து கிடக்கும் ஆழ்துளைகிணறு


ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் திறந்து கிடக்கும் ஆழ்துளைகிணறு
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 6:41 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மணப்பாறை அருகே குழந்தை ஆழ்துளைகிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கி விட்ட நிலையில் பயன்படுத்தாமல் திறந்த நிலையில் கிடக்கும் ஆழ்துளைகிணறுகளை மூடும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் திறந்தவெளியில் ஆழ்துளை கிணறு இருப்பதால் பயணிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏதாவது அசம்பாவித சம்பவம் நிகழும் முன்பு திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறை மூட நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை பொறுத்தவரை மற்ற இடங்களை போல அல்லாமல் ஒரே இடத்தில்தான் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இதனால் எப்போதும் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பஸ்நிலைய நுழைவுவாயிலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பெரும்பாலான பஸ்கள் உள்ளே வராமல் பஸ் நிலையத்தை புறக்கணிக்கின்றன. இருப்பினும் மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு அனைவரையும் பயமுறுத்துகிறது.

இந்த ஆழ்துளைகிணறு கடந்த 2009-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு உள்ள பொதுசுகாதார வளாகத்துக்கு இங்கிருந்துதான் தண்ணீர் சென்றது. தற்போது பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலையில் அதனை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வந்து செல்லும் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உள்ளதால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின்றி கிடப்பதால் பயன்பாடின்றி கிடைக்கின்றன. ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடி போட்டு மூடாமல் ஒன்றில் துணி போட்டு மூடியுள்ளனர். மற்றொன்றில் சிறிய கல்லை வைத்து மூடியுள்ள நிலையில் மற்றொன்று மூடப்படாமல் உள்ளது. ஆழ்துளை கிணறுகளை முறையாக பாதுகாப்பாக மூடி போட்டும், கல்,மண்களை உள்ளே செலுத்தியும் மூடுவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story