பள்ளிப்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்


பள்ளிப்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 6:58 PM GMT)

பள்ளிப்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை இ.எஸ்.டி நகரை சேர்ந்தவர் ராமகோட்டி ( வயது 60). நெசவு தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (54). மகள் கயல்விழி (32). பேத்தி திவ்யா (9). 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார்கள். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு இவரது வீட்டின் சுவர் ஒரு பக்கம் இடிந்து தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது விழுந்தது.

இதில் ராமகோட்டி, சாந்தி, திவ்யா, கயல்விழி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வாசு பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story