கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிப்பு


கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 9:45 PM GMT (Updated: 30 Oct 2019 8:41 PM GMT)

மழை காரணமாக கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

கோவை,

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கோவை குற்றால அருவி உள்ளது. இந்த அருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். அருவி அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதாலும், செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

சாடிவயல் சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்துச்செல்லப்படுகிறார்கள். தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கனமழை கொட்டியது. இதனால் கோவை குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் அனுமதி வழங்குவது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சிறுவாணி வனப்பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடமே தெரியாத அளவுக்கு தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் அருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை குற்றால அருவியில் தண்ணீர் மிகவும் அதிகமாக உள்ளது. அத்துடன் அருவிக்கு செல்லும் வழியில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு மண்சரிவும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே மழை முடியும் வரை சுற்றுலா பயணிகள் யாரும் கோவை குற்றால அருவிக்கு வர வேண்டாம்.

இங்கு வரும் பயணிகள் சோதனை சாவடி அருகே உள்ள ஆற்றில் குளிக்கிறார்கள். அதுவும் ஆபத்தானதுதான். திடீரென்று ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story