வெவ்வேறு விபத்துகளில் துணி வியாபாரி உள்பட 4 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் துணி வியாபாரி உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 9:18 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் துணி வியாபாரி உள்பட 4 பேர் பலியானார்கள்.

சேலம், 

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமையா (வயது 33). இவர் சேலம் மாவட்டம் கருப்பூர் சந்தைபேட்டை பகுதியில் தங்கியிருந்து துணி மற்றும் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காலை மொபட்டில் ஓமலூர் அருகே பச்சனம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவரது மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராமையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான ராமையாவுக்கு, சுகன்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியன் (62). இவர் நெய் காரப்பட்டி பிரிவு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முனியன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி கமலா (65). இவர் சம்பவத்தன்று மன்னார்பாளையம் பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் செல்லம்மாள் (70). இவர் வீட்டில் இருந்து எதிரே உள்ள சாலைக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் செல்லம்மாள் படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்தவரை தேடி வருகின்றனர்.

Next Story