நாகையில் 1,343 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-திருமண உதவி தொகை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்


நாகையில் 1,343 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-திருமண உதவி தொகை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 5:49 PM GMT)

நாகையில் 1,343 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-திருமண உதவி தொகையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்- திருமண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். செல்வராசு எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு 1,343 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை ஆகியவற்றை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன.

தாலிக்கு தங்கம்

திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு தாலி செய்ய 8 கிராம் தங்கம், ரூ,25 ஆயிரம் திருமண உதவி தொகை மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் 4 கிராம், ரூ.50 ஆயிரம் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கல்வியை ஊக்குவிக்கும் சமுதாய புரட்சிகர திட்டமாகும். ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், நாகை வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story