தொகுப்பூதிய பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்: 4-ந் தேதி முதல் வேலைக்கு வராவிட்டால் பணி நீக்கம்


தொகுப்பூதிய பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்: 4-ந் தேதி முதல் வேலைக்கு வராவிட்டால் பணி நீக்கம்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 8:49 PM GMT)

தொகுப்பூதிய பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 4-ந் தேதி முதல் பணிக்கு வராவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருப்பூர்,

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் பலர் கடந்த 23-ந்தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பல்கலைக்கழகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பல்கலைக்கழக நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 4 பேரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் தொகுப்பூதிய பணியாளர்கள் பலர் நேற்று முன் தினம் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்றனர்.

பணிநீக்கம்

இந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெரியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகத்திற்குள் 30-ந்தேதி வருகை புரிந்து, வருகை பதிவேட்டில் கையொப்பமிட்ட பிறகு பணி செய்யாமல் போராட்டத்தில் கலந்து கொண்ட தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு 30-ந்தேதி ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

31-ந்தேதி மற்றும் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பணிக்கு வராமல் அல்லது வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு பிறகு பணி செய்யாமல் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், விடுமுறை எடுத்துக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் ஆகியோருக்கும் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. மேலும் வருகிற 4-ந்தேதி முதல் வேலைக்கு வரவில்லையென்றால், போராட்டத்தில் ஈடுபடும் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story