மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.7,154 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்: கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.7,154 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்: கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 1 Nov 2019 10:00 PM GMT (Updated: 1 Nov 2019 4:26 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் நபார்டு வங்கியின் மூலம் ரூ.7,154 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து சாலையோர வியாபாரிகள் 3 பேருக்கு ரூ.95 ஆயிரம் கடன் வழங்குவதற்கான ஆணையை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன்திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டுக்கு பயிர் கடன் ரூ.1,997 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரம், விவசாய முதலீட்டு கடன் ரூ.796 கோடியே ஒரு லட்சத்து 98 ஆயிரம், விவசாய கட்டமைப்பு கடன் ரூ.161 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரம், விவசாய இதர கடன்கள் ரூ.136 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் ஆக மொத்தம் விவசாயத்துக்கு ரூ.3091 கோடியே 11 லட்சத்து 36 ஆயிரமும், சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ.2285 கோடியே 10 லட்சமும், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.1349 கோடியே 25 லட்சமும், அடிப்படை கட்டுமான வசதி ரூ.97 கோடியே 40 லட்சத்து 40 ஆயிரமும், சுய உதவிக்குழுக்கான கடன் ரூ.331 கோடியே 20 லட்சம் ஆக மொத்தம் ரூ.7,154 கோடியே 7 லட்சம் அளவுக்கு கடன் வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணு சந்திரன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, தூத்துக்குடி பாரத ஸ்டேட் வங்கி மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் யோகானந்த், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மோகன்குமார், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜயபாண்டியன் மற்றும் வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story