உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் -  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
x
தினத்தந்தி 1 Nov 2019 10:30 PM GMT (Updated: 2 Nov 2019 12:08 AM GMT)

“உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்” என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை,

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த ஆண்டு சிறப்பாக நடந்தது. அடுத்ததாக அசாம் மாநிலம் பிரம்மபுத்திராவில் நடைபெறும் மகாபுஷ்கர விழாவில் கலந்து கொள்கிறேன். தாமிரபரணி மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள புனித நதிகளை சுத்தம் செய்யும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி கதர் மற்றும் கைத்தறி விற்பனை எதிர்பார்த்தபடி அமைந்தது. நாங்கள் நிர்ணயித்த இலக்கை தாண்டி விட்டோம். இந்த ஆண்டு பல புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய வடிவமைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளது. அ.தி.மு.க.வின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றார். அவர் அன்னிய முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். அதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு செல்கிறார். இந்த சுற்றுப்பயணம் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்துக்கு புதிய திட்டங்களை கொண்டு வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story