சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு? மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியுடன் சந்திப்பு


சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு? மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 12:18 AM GMT (Updated: 2 Nov 2019 12:18 AM GMT)

மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேசினர். அப்போது, மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மும்பை,

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வருகிறது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினர். பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க இது சிறந்த திட்டம் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்களும் பச்சை கொடி காட்டினர்.

இந்த விஷயத்தில் சோனியா காந்தியின் ஒப்புதலை பெற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட், முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோர் டெல்லி விரைந்தனர். இரவில் அவர்கள் சோனியா காந்தியை சந்தித்து பேசி னர்.

அப்போது சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியதாக தெரியவந்தது.

இந்த சந்திப்புக்கு பிறகு பாலசாகேப் தோரட் கூறுகையில், “மராட்டியத்தில் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் அசாதாரண சூழலை சோனியா காந்தியிடம் தெரிவித்தோம். ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் பற்றி பேசவில்லை. இந்த விஷயத்தில் உரிய நேரம் வரும்போது, சோனியா காந்தி முடிவு எடுப்பார்” என்றார்.

Next Story