காரைக்குடி சிக்ரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா


காரைக்குடி சிக்ரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா
x
தினத்தந்தி 2 Nov 2019 10:30 PM GMT (Updated: 2 Nov 2019 9:51 PM GMT)

காரைக்குடி சிக்ரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

காரைக்குடி,

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இறுதி வாரம் முதல் நவம்பர் முதல் வாரம் வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நேர்மையே வாழ்க்கையின் வழி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிக்ரி இயக்குனர் தலைமை தாங்கினார்.

இதில் விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று நேர்மை தவறாமை, பொது வாழ்வில் நேர்மையை ஊக்குவிப்பது, லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது, எல்லா ஊழியர்களும் ஒழுக்க நெறிமுறை கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டனர்.

சிக்ரி வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. விழிப்புணர்வு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, கிராமப்புற அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஊழல் தடுப்பு பற்றிய பேச்சு, ஓவியம் மற்றும் விளக்கப்பட போட்டிகள் நடைபெற்றன.

மாரத்தான் ஓட்டம்

சிக்ரியில் உள்ள பி.டெக். மாணவர்களுக்கு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியின் நிறைவில் சிறப்பு விருந்தினராக சென்னையை சேர்ந்த வக்கீல் ஸ்வப்னா கலந்து கொண்டார். லஞ்சம், ஊழலை தடுக்க ஊழியர்கள் தாங்கள் செய்யும் வேலையில் திருப்தி மற்றும் சமூக பொறுப்புணர்வு இருக்கிறதா என்று சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று பேசப்பட்டது. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக சிக்ரியின் முதன்மை விஞ்ஞானி சோழன் வரவேற்புரையாற்றினார். இயக்குனர் சரஸ்வதி, நிர்வாக அதிகாரி குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story